கோவை: ஒரு நாட்டின் கலை மற்றும் மொழி சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும் என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோவை காந்தி பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மன்றத்தின் தலைவரும் நடிகருமான வாகை சந்திரசேகர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் நாதஸ்வரம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, கரகாட்டம், தப்பாட்டம், ஜிக்கா ஆட்டம், வள்ளி கும்மி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த கலை நிகழ்ச்சிகளை பூங்காவிற்கு வந்திருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்வில் மேடையில் உரையாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர், கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தமிழ்நாட்டின் கலைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக தான் இந்த அமைப்பை தமிழக முதல்வர் உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.
சங்கீத அகாடமி என்று இருந்ததை கலைஞர் கருணாநிதி தான் தான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று பெயர் மாற்றியதாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் கலைஞர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கலைஞர்களுக்கு ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை தமிழக முதலமைச்சர் 3000 ரூபாயாக உயர்த்தியதையும் குறிப்பிட்டார்.

ஒரு நாடு வளமாகவும் செழிப்பாகவும் இருக்கிறது என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் கல்வியை வைத்து மட்டும் எடை போடுவதில்லை என்று கூறிய அவர் அந்த நாட்டின் கலை சிறப்பாக இருந்தால் அந்த நாடு சிறப்பாக இருக்கும் நாட்டின் மொழி சிறப்பாக இருக்கிறது என்றால் அந்த நாடு சிறப்பாக இருக்கும் எனக் கூறினார்.
மேலும் கொங்கு மண்ணிற்கே உரித்தான வள்ளி கும்மி நடனத்தை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் வள்ளிகும்மி நடன கலைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளவதாக கூறினார்.

