கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம். வார்டு எண்.77-க்குட்பட்ட சொக்கம்புதூர் மற்றும் மேற்கு மண்டலம் வார்டு எண் 33க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகளையும், மேற்கு மண்டலம், வார்டு எண்.34 க்குட்பட்ட கவுண்டம்பாளையம், வித்யா காலனியில் உள்ள குடியிருப்புகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் மற்றும் குப்பைகள் குறித்து புகார்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், வார்டு எண்.28க்கு உட்பட்ட கொமசியா சாலை, என்.ஆர்.ஐ.லே-அவுட் பகுதியில் புதிய தார் சாலை அமைப்பது குறித்தும், மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட முக்கிய இடங்களான வார்டு எண்.83க்கு உட்பட்ட அரசு மருத்துவமனை எதிரில் மற்றும் வார்டு எண்.82-க்குட்பட்ட வின்சென்ட் சாலை ஆகிய பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நடைபாதையை அகலப்படுத்துவது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் நர்மதா, செயற்பொறியாளர்கள் (பொ) எழில், யோகசித்ரா, உதவி செயற்பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.





