கோவை: சாலை விதிகளை மீறிய சிறார்களின் பெற்றோர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்தவாறு இருசக்கர வாகனத்தில் சாலை விதிகளை மீறி செயல்பட்ட இளம் சிறார்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை பொள்ளாச்சி சாலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வாகனத்தில் stand ஐ சாலையில் உரசி தீப்பொறி வர வைத்தபடியும், சாகசம் செய்தபடியும், கூச்சலிட்டவாரும் சில இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்கள் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தனர்.
காவல்துறை கவனத்திற்கு இது செல்லவே சிசிடிவி காட்சிகள் மற்றும் instagram வீடியோ அடிப்படையில் அந்த இளைஞர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் 18 வயது நிரம்பாமல் இருந்த சூழலில் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
பின்னர் சட்டப்படி அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சாலையில் இது போன்ற சாகசங்களை ஈடுபட்டாலோ , சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.





