கோவை : கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூலை 28) நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது பகுதிகளில் உள்ள குடிமை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்களை நேரடியாக மனுவாக அளித்து தீர்வு கோரலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு, மின்விளக்குகள், பாதாள சாக்கடை, சொத்துவரி, தொழில்வரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை நேரடியாக மேயரிடம் தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.





