கோவை: கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 66-வது வார்டு அம்மன்குளம் பகுதியில் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகளைச் சரிசெய்ய வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய லட்சிய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் செந்தில்முருகன் கூறும் போது :
கோவை மாநகராட்சி 66-வது வார்டுக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் நீண்டநாட்களாகவே பொதுமக்கள் வாழத் தகுதியற்ற சூழல் நிலவி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்குள் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதியே குப்பைக் கிடங்கு போலக் காட்சியளிக்கிறது.
மேலும், பாதாள சாக்கடை முறையான பராமரிப்பின்றி கழிவுநீர் தொடர்ந்து தெருக்களில் வெளியேறி வருகிறது.
அங்குள்ள குடியிருப்பு பிளாக்குகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங்க் உடைந்து, கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.
குழந்தைகள் விளையாடும் இடங்களில் கழிவுநீர் தேங்கியிருப்பதால், நோய் பரவும் அபாயம் உச்சத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதிக்கு மாமன்ற உறுப்பினரோ அல்லது மாநகராட்சி அதிகாரிகளோ நேரில் வந்து ஆய்வு செய்யவோ, குறைகளைக் கேட்கவோ முன்வருவதில்லை. பொதுமக்கள் தரும் மனுக்களும் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
கட்சியின் தலைவர்கள் ஜோ சார்லஸ் மார்ட்டின் மற்றும் பொதுச்செயலாளர் நெல்லை ஜீவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அப்பகுதியில் நாங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தோம்.
அங்குள்ள மக்கள் டெங்கு, காலரா, மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே, கோவை மாநகராட்சி ஆணையர் உடனடியாகத் தலையிட்டு அம்மன்குளம் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, உடைந்த செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைப் பணிகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், அப்பகுதி மக்களை ஒன்றிணைத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.





