கோவை: கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது.
Swadeshi Jagran Manch அமைப்பு சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் அரங்கில் ‘கோவை சுதேசி மேளா’ எனும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டார். ராம்ராஜ் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன் மற்றும் சுதேசி ஜக்ரான் மஞ்சி அமைப்பின் நிர்வாகிகள் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் மத்திய இணை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து விருந்தினர்கள் சிறப்புரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்கள் முன்னெடுத்த சுதேசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும், கோவை சுதேசி மேளா போன்ற நிகழ்வுகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் எனவும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர், மத்திய அரசின் தொழில் முன்னேற்ற திட்டங்களான மேக் இன் இந்தியா திட்டம், லோக்கல் ஃபார் குலோக்கல், ஆத்ம நிர்பர் பாரதம் ஆகிய திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதாகவும், குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதில் 50 சதவீதத்திற்கும் மேல் மகளிர் சிஇஓக்களாக தலைமை வகிப்பது பெருமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
2047ஆம் ஆண்டில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்தியா திகழும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதமாக உருவாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது மிகவும் முக்கியம் எனவும், அதற்கு மத்திய அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவாக சிறந்த வகையில் செயல்பட்டு வரும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாராட்டு விருதுகள் விருதுகளை அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.





