கோவை: நாளை குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது
உலக மக்கள் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1% பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம்.
தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருட்கள் மூலம்மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் வருடம் இருமுறை நாடு தழுவிய குடற் புழு நீக்கும் திட்டம் 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குடற்புழு நீக்க முகாம் 10.08.2026 ஆம் நாளன்று கோவை மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்கள், 985- தனியார் பள்ளிகள், 1070- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150-கல்லூரிகள், 90-ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530-துணை சுகாதார நிலையங்களின் மூலம் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 17.08.2026 அன்று வழங்கப்படும்.
கோவை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 9,70,708 குழந்தைகளுக்கும், 2,53,448, 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) என மொத்தம் 12,24,156 பயனாளிகள் பயனடையவுள்ளனர். குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டாசோல் மாத்திரையை) உணவு உட்கொண்ட பின்னர் நன்றாக சப்பி, மென்று விழுங்க வேண்டும். பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே விழுங்ககூடாது.
இச்சிறப்பு முகாமினை பார்வையிட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பபு மருந்து துறையிலிருந்து வட்டார மருத்துவர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் உள்ள வட்டார திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
ஆகவே அனைத்து 1 முதல் 19 வயதிற்குட்பட்ட இருபாலினர் மற்றும் 20-30 வயதுள்ள பெண்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று குடற்புழு தொற்றில்லா சமுதாயத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.





