கோவை: கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், “ஆபரேஷன் ஷீல்டு” என்ற பெயரில் புதிய ஒருங்கிணைந்த களப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு சுமார் 500 மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளை மையமாக வைத்து, அதனை சுற்றியுள்ள 10 கி.மீ. பரப்பளவில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு வளையம் உருவாக்குவதே “ஆபரேஷன் ஷீல்டு” திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் முதற்கட்டமாக கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மண்டல சுகாதார அலுவலர் ஒருங்கிணைப்பில், 10 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் சிறப்பு குழுக்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 4 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டின்கள், உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படுகின்றன.
மேலும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் மற்றும் கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் புகை மருந்து அடிப்பதுடன், கொசுப்புழு உற்பத்தி மூலங்களையும் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
கள ஆய்வின்போது பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்தும் சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் பொதுமக்களும் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்களை காலி செய்து, சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய டயர்கள், பாட்டில்கள், டின்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியையும் டெங்கு இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தற்போது முதற்கட்டமாக மத்திய மண்டலத்தில் 10 கி.மீ. சுற்றளவில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு உற்பத்தி மூலங்களை கண்டறிந்து அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. “ஆபரேஷன் ஷீல்டு” மூலம் கொசு உற்பத்தி இடங்கள் கண்டறிந்து அகற்றப்பட்டு, புகை மருந்து மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.





