கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஆடியதாக கூறி அங்கிருந்தவர்கள் வெளியேறினர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தங்க நகை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான தமிழக மற்றும் வட மாநில தொழிலாளர்கள் அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென கட்டிடத்தின் பின்புறம் அசைவு தெரிந்ததாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து, அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிடத்தின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்து சென்றனர்.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பின்புற சுவர் இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டிடத்திற்கு அருகிலேயே மற்றொரு அடுக்குமாடி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




