கோவை:கோவை செம்மொழி பூங்காவில் தூய்மை பணியாளர்களும் செக்யூரிட்டி பணியாளர்களும் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. கோவை மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு இடமாக செம்மொழி பூங்கா விளங்கி வரும் நிலையில் இங்கு 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 30க்கும் மேற்பட்ட செக்யூரிட்டி பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது செக்யூரிட்டி பணியாளர்களுக்கு செம்மொழி பூங்கா தரப்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு 20000 ரூபாய் சம்பளம் என கூறப்பட்டு பிடித்தம் போக 16 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சம்பளம் மிகவும் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதமும் ஏழாம் தேதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் தற்பொழுது வரை வழங்கப்படாமல் உள்ளதாகவும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறி தூய்மை பணியாளர்கள், செக்யூரிட்டி பணியாளர்கள் பூங்காவிற்கு வெளியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்மொழி பூங்கா அலுவலர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும கலைந்து செல்லாததால் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் நேரடியாக வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வேலை செய்ய மாட்டோம் என்றும் சம்பளம் தங்களது வங்கி கணக்கில் வந்த பிறகு வேலை செய்து கொள்வோம் எனவும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று செக்யூரிட்டி பணியாளர்களும் தங்களுக்கு சம்பளம் தற்பொழுது வரை கிடைக்கப் பெறவில்லை என்றும் தங்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டால் தான் வேலை செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
செம்மொழிப் பூங்கா திறக்கப்பட்டது முதல் சம்பளம் சரியான முறையில் வழங்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் இந்த இரண்டு மாதமும் கால தாமதம் செய்து வருவதாக தூய்மை பணியாளர்களும் செக்யூரிட்டி பணியாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.





