கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம் மாங்கரை கணுவாய் பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
மலை மற்றும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன அதுமட்டுமின்றி வாழை மரங்கள் தென்னை மரங்களையும் உண்டு செல்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அப்பொழுது தனியார் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டி பார்த்து சென்றுள்ளது. சில கேஸ் சிலிண்டர்களும் கடைகளுக்கு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளன. அப்பொழுது இரண்டு வாகன ஓட்டிகளும் யானை நிற்பது தெரியாமல் வாகனத்தை அப்பகுதிகளில் இயக்கி சென்றுள்ளனர்.
தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இரவு நேரங்களில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அதே சமயம் ஹோட்டல் கடைக்காரர்கள் கேஸ் சிலிண்டர்களை வெளியில் வைக்க வேண்டாம் எதிர்பாராத விதமாக யானை சிலிண்டரை தாக்க முற்பட்டால் அசம்பாவிதம் ஏற்பட கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.




