கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிலக்கடலைக்கான விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நிலக்கடலை ஒரு முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். உலகில் நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். இப்பயிர் நாடு முழுவதும் பெரும்பாலும் மழையை நம்பியே பயிரிடப்படுகிறது.
குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா ஆகியவை இந்தியாவில் நிலக்கடலையின் முக்கிய உற்பத்தியாளர்களாகும்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் 57.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 119.42 லட்சம் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு ஹெக்டேருக்கு 2073 கிலோ உற்பத்தித்திறன் எட்டப்பட்டுள்ளது. மேலும், 2025 முதல் 2026 வரை நிலக்கடலை சாகுபடிப் பரப்பு 3.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய பருவமழை ஏற்றத்தாழ்வுகள் காரணமாக வரத்து குறையக்கூடும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, இந்தியாவில் நிலக்கடலை உற்பத்தியில் முக்கிய மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு 2024-25 ஆம் ஆண்டில்3.15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், ஒரு ஹெக்டேருக்கு 2439 கிலோ உற்பத்தித்திறனுடன் 7.69 லட்சம் டன்கள் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டது தமிழ்நாட்டில் நிலக்கடலை பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்கள் திருவண்ணாமலை, நாமக்கல், விழுப்புரம் . சேலம், கடலூர் மற்றும் அரியலூர் ஆகும். மாநிலம் முழுவதும் நிலக்கடலை எண்ணெய் சமையலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் உபபொருள் கால்நடைகளுக்கு அதிக புரதச்சத்து கொண்ட தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது மேலும்இனிப்புப் பண்டமாகவும் உட்கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களின் மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து ஆண்டு முழுவதும் இப்பயிர் விதைக்கப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான மாவட்டங்களில் இது ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் விதைக்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு கடந்த 25 ஆண்டுகளாக திண்டிவனம் மற்றும் சேவூர் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளில் நிலவிய நிலக்கடலை விலைகளைப் பகுப்பாய்வு செய்து ஒரு சந்தைக் கணக்கெடுப்பையும் நடத்தியுள்ளது.
காலத் தொடர் பகுப்பாய்வின்படி, அறுவடையின் போது நல்ல தரமான நிலக்கடலையின் விலை ரூ. 65 முதல் ரூ70 வரை இருக்கும் என்று தெரிகிறது. எனவே, விவசாயிகள் அதற்கேற்ப விதைப்பு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சந்தைப்படுத்தல் தகவல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641 003.
தொலைபேசி: 0422-2431405
மின்னஞ்சல்: tndemic@gmail.com





