கோவை: கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வரை வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாமில் 181 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சில நாட்களில் முகாம் நடைபெற உள்ளது..
கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் ‘லோக் கல்யாண் மேளா’ சிறப்பு முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற முகாமில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பங்கேற்று கடன் பெற விண்ணப்பித்தனர்.
மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற முகாமில், மொத்தம் 181 பேர் வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 25), ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கடன் பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





