கோவை: டவுன்ஹாலில் இருந்து உக்கடம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் பணம் திருடியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
கோவை டவுன்ஹாலில் இருந்து உக்கடம் நோக்கி நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கிருஷ்ணன் என்பவரின் மனைவி ஓணம் பண்டிகைக்காக பூக்கள் மற்றும் புதிய துணிமணிகளை வாங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளார்.
பஸ் உக்கடம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கைப்பையில் இருந்த ரூ.1,100 பணத்தை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதேபோல், அதே பஸ்சில் பயணம் செய்த மும்தாஜ் என்பவரிடமும் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
Also Read: ஓணம் ஸ்பெஷல்: சித்தாப்புதூரில் குவிந்த மலையாள மக்கள்!
பணம் திருடுபோனதை அறிந்த பயணிகள், பஸ்சில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 2 பெண்களை பிடித்தனர். பின்னர் அவர்களை உக்கடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் செட்டிபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி (28) மற்றும் பழனியம்மாள் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் ரூ.3,100 பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் முதல் உக்கடம் சென்ற அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் ரூ.3,100 பணம் திருடியதாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.





