கோவை: தமிழக அரசின் புதிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் இதுவரை 1,200 பச்சிளம் குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்த திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தாய்மாமன் தங்க மோதிரம்
கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில் தற்போது 1,200 குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் உள்ளூர் அளவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகளில் உள்ளூர் அமைச்சர்கள் பங்கேற்று தலைமை வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும். திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் தகுதியான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தங்க நகை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சிலர் இந்த திட்டத்துக்கான கொள்முதல் நடைமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த நடைமுறை பயனளிக்காமல் போகலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
பாதிப்பு
இதுகுறித்து தங்க நகை உற்பத்தியாளர்கள் கூறுகையில், “தங்கம் மற்றும் நகை உற்பத்தியில் தமிழகம் நாடு அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் அளவுக்கு தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எனவே, ஒரே ஒப்பந்ததாரருக்கு மொத்தமாக ஆர்டர் வழங்குவதற்கு பதிலாக, கோவை போன்ற முக்கிய தங்க நகை உற்பத்தி மையங்களில் உள்ள உற்பத்தியாளர்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்திருக்கலாம்” என்றனர்.
ழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்குகிறது.





