கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டில் ஆட்கள் இருந்தபோதே பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம், வெங்கடாசலம் காலனியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் (55). இவர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று சோதனை செய்தார்.
அப்போது பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.40 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சூரிய நாராயணன் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
இதையடுத்து சூரிய நாராயணன் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





