கோவை: கோவையில் ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெங்காய விலை உயர்வை தொடர்ந்து இன்று முதல் தமிழ்நாடு நியாய விலைக்கடைகளில் வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அரசு அறிவித்து விற்பனை துவங்கி உள்ளது. முதல்கட்டமாக நகரப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஒரு அட்டைக்கு ஒரு கிலோ வீதம் விற்பனை நடைபெறுகிறது.
அதன்படி கோவை மாநகரில் 661 நியாய விலைக் கடைகளில் வெங்காய விற்பனை துவங்கி உள்ளது. காலை முதல் பொதுமக்கள் 35 ரூபாய் செலுத்தி வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கி இந்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கடையில் உள்ள அலுவலர்களிடம் வெங்காய விற்பனை, அதனை வாங்குவோர் விவரங்கள் குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர், முதல்வர் அறிவுரையின் படி நகர பகுதியில் உள்ள நியாய விலைகளில் வெங்காயம் குறைந்த விலையில் தரப்படுகிறது என்றும் கோவையில் 661 கடைகளில் வெங்காயம் குறைந்த விலைக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.
ஒரு அட்டைக்கு ஒரு கிலோ கொடுக்கப்படுகிறது என்றும் இந்த விலையில் வெங்காயத்தை அருகில் உள்ள கூட்டுறவு சங்க கடைகளில் கொடுக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
மேலும் கூடுதலாக வெங்காயம் கிடைப்பதற்கு கருத்துகள் கேட்டு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நேபாள் சென்றவர்கள் 28 பேர் நேற்று முன் தினம் பத்திரமாக வந்தடைந்தடைந்துள்ளார்கள் என்ற அவர் மேலும் அங்குள்ளவர்களை தொடர்ந்து தமிழக அரசும் இந்திய அரசும் அவர்களை தொடர்பு கொண்டு வருகிறது என்றும் அங்கு சென்றவர்களின் பெயர் பட்டியலையும் நாம் திரட்டி உள்ளோம் தகவல் வந்தவுடன் அவரவர் குடும்பத்தினரை தொடர்பு கொள்வோம் என்றார்.





