கோவை: கோவையில் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் பூச்சிகள் மற்றும் களைகளின் உயிரியல் கட்டுப்பாடு பழங்குடியினர் உப திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ப் பாதுகாப்பு மையத்தில் உள்ள வேளாண் பூச்சியியல் துறையில்’பூச்சிகள் மற்றும் களைகளின் உயிரியல் கட்டுப்பாடு” குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பில்லூரில் முதலாவது “பழங்குடியினர் உப திட்ட நிகழ்ச்சி” நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முப்பது பயனாளிகள் கலந்துகொண்டனர்.

வேளாண் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தி, நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். வேளாண் பூச்சியியல் துறைப் பேராசிரியரும் தலைவருமான முனைவர் முருகன் பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பூச்சி மேலாண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பூச்சியியல் துறைப் பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஜெயராணி. உயிரியல் முறை சார்ந்த பூச்சி மேலாண்மையின் (biorational pest management) அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேலும், நிலையான பயிர் பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உயிரியல் முறை சார்ந்த இடுபொருட்களைத் திறம்படப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேளாண் பூச்சியியல் துறைப் பேராசிரியர்களும், தலைவரும் இணைந்து30 விவசாயிகளுக்கு தலா ரூ. 3,500 மதிப்புள்ள உயிரியல் முறை சார்ந்த இடுபொருட்களை வழங்கினர். ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்பட்ட
தொகுப்பில் உளுந்து விதைகள் (4 கிலோ). கத்தரி, தக்காளி மற்றும் சிவப்புத் தண்டுக்கீரை விதைகள் (தலா ஒரு பாக்கெட்), ரைசோபியம் கல்ச்சர் (1 கிலோ). டிரைக்கோடெர்மா விரிடி (1 கிலோ)பயறு வொண்டர் 1 கிலோ)டிரைக்கோகிராமா கைலோனிஸ் (6 சிசி) மற்றும் கிரைசோபிட் முட்டைகள் (3,900 எண்ணிக்கை) ஆகியவை அடங்கியிருந்தன.





