கோவை: கோவையில் ரவுடி கும்பல் ஒன்று வீடு புகுந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் நகரமான கோவையில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதிகளில் கல்லூரிகளும், பவுண்டரிகளும் அதிகளவில் உள்ளன.
இதனால் அப்பகுதிகளில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தனித் தனி அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி வருகின்றனர்.
Read news: தோசை சுட்டு வாக்கு சேகரித்த கோவை தவெக வேட்பாளர்…
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டு, லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் மோதல் சம்பவங்களும் இப்பகுதியில் தலைதூக்கி உள்ளன.
இந்தச் சூழலில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், ரவுடி கும்பலை முந்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ரவுடி கும்பல் ஆத்திரம் அடைந்து, இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை ஆபாசமாகப் பேசித் தாக்கி உள்ளனர்.
Read news:லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு; VIDEO உள்ளே…
வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) இந்த தாக்குதல் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சி.சி.டி.வி ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற சமூக விரோதச் செயல்களால் தாங்கள் நிம்மதியாக வசிக்கும் சூழல் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

