கோவை: கோவையும் கரூரும் இரண்டு கண்கள் என செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவக்கி அவர் மக்களிடையே சிறிது தூரம் நடந்து சென்று ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
Read news: Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்
பிரச்சாரத்தில் உரையாற்றிய செந்தில்பாலாஜி, இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி. 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்குமானது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கில் திமுக வெற்றி உறுதி
கோவை தெற்கு தொகுதியில் 2026 இல் உதயசூரியன் உதிக்கும் நிச்சயமாக திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். கோவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது 10 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றாலும் 234 தொகுதிகளிலும் வேட்பாளராக இருந்து மக்கள் பணிகளை முதல்வர் மேற்கொண்டு உள்ளார். கோவையிலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக கோவையில் செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம், தங்க நகை பூங்கா, மேம்பாலம் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கோவையும் கரூரும் என் இரண்டு கண்கள்
கோவையில் 8,200 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நிச்சயமாக இந்த தேர்தலில் கோவையில் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். காலையில் கூட கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் பொழுது என் கரூரை விட்டு செல்கிறீர்கள் என கேட்டனர் அதற்கு கரூரும் கோவையும் இரண்டுமே எனது இரண்டு கண்கள் போல என பதில் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.
Read news:தொகுதி மாறிய நயினார்… இதுதான் காரணமா?
கோவையில் பெரும் வெற்றி இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கோவை மாவட்டத்தில் தெற்கு தொகுதியை முதன்மைத் தொகுதியாக நிறைவேற்ற பாடுபடுவேன் அதற்காக பணியாற்றுவேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில் பாலாஜி, முதல்வர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார், மகத்தான வெற்றியை தலைவருக்கு சமர்ப்பிப்பேன், குறிப்பாக தெற்கு தொகுதியில் மகத்தான வெற்றியை சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.
திமுகவில் வாய்ப்பு கிடைக்காததற்கு யாரும் ஆதங்கம் பட வேண்டாம் என்றும் வாய்ப்புகள் வழங்குவது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார் மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் வாக்கு எண்ணிக்கை நாளில் பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.
தலைமை தான் முடிவு எடுக்கும்
நான் எந்த தொகுதியில் நிற்பது என முடிவெடுப்பது முதல்வர்தான், நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் எந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்பதையும் தலைமை தான் முடிவு எடுக்கும் என்று கூறினார்.
Read news: கோவையில் ஜெயின் சமூகத்தினரிடம் ஆதரவு திரட்டிய செந்தில் பாலாஜி…
கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை உதயசூரியன் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். 2ம் தேதி முதல்வர் கோவையில் 7 தொகுதிகளுக்கான பரப்புரையை மேற்கொள்கிறார் என்றும் தெரிவித்தார். விஜயின் வாக்கு திமுகவின் வாக்கை சிதறடிக்குமா என்ற கேள்விக்கு எங்களது வாக்கு எங்களிடம் உள்ளது என்று பதில் அளித்தார். மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் 80 அடி சாலையில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

