கோவை: பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறால் நடுரோட்டில் பேருந்துகளை நிறுத்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு போலீசார் நேற்று மாலை ஹோப்ஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கிடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரு ஓட்டுநர்களும் பேருந்துகளை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.
இதைக் கண்ட ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் பிரித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாய்பாபா காலனியைச் சேர்ந்த உதயகுமார் (27) மற்றும் இருகூர் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த மாதவன் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.





