கோவை: கோவை மாவட்டத்தில் இணையம் சார்ந்த (கிக்) தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக நாளை (18-ந்தேதி) சிறப்பு பதிவு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்காக கோவையில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பதிவு முகாம் நடைபெறுகிறது.
கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் உள்ள ஸ்ரீ ஆனந்தாஸ் ஓட்டலில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய வருபவர்கள் வயதுக்கான ஆவணம், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை, ஒரு புகைப்படம், நியமனதாரராக பரிந்துரைக்கப்படும் நபரின் அடையாள ஆவணம் மற்றும் பணி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
மேலும், 18 வயது பூர்த்தியடையாதவராக இருந்தால், பாதுகாவலரின் அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலம் தகுதியின் அடிப்படையில் உயர் கல்வி நிதியுதவி, தகுதியான பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி, மகப்பேறு உதவி, மருத்துவ உதவி, இயற்கை மரண நிதியுதவி மற்றும் விபத்து மரண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





