கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயத்துக்கு, அப்பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கிடைத்த தகவலின் அடிப்படையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே, வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார், இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நரசிம்மநாயக்கன்பாளையம் குமரன் நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் சோதனை செய்தபோது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஆரஞ்சு நிற டைடால் (Tydol) மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.
போதை மாத்திரைகள்
இதையடுத்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த விவோ Y39, சாம்சங் ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Also Read: புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய சிறுத்தை! நீலகிரியில் பரபரப்பு
போதைப்பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





