கோவை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவையிலும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பைகள் மற்றும் உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ. கண்ணன் தலைமையில், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் லிஜேஷ், சரவணகுமார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் பயணிகள் கொண்டு வரும் பைகள் மற்றும் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் போலீசார் கண்காணித்தனர்.
மேலும், ரயில் நிலையத்தின் நடைமேடைகள், பார்சல் அனுப்பும் பகுதி, ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 11 முதல் 16-ம் தேதி வரை டெல்லிக்கு பார்சல்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி யாரேனும் பார்சல்களை அனுப்புகிறார்களா என்பதையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் எஸ்.ஐ. கண்ணன் கூறுகையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதேபோல், கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வழிபாட்டு தலங்கள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய பகுதிகளிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பயணிகளின் உடைமைகளை எக்ஸ்ரே ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.





