கோவை : கோவை வெள்ளலூரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கழிவு மேலாண்மை தளத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கோவை வெள்ளலூர் கழிவு மேலாண்மை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களில் 10 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.
மேலும், விண்ட்ரோ கம்போஸ்டிங் பணிகளிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சுமார் 7.5 லட்சம் டன் பழைய குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளலூர் குப்பைக்கிடங்கின் தற்போதைய நிலையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் திருப்திகரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது உள்ள செயலாக்க திறனை கொண்டு அக்டோபர் மாதத்திற்குள் பயோ-மைனிங் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால செயல்திட்டம், அதற்கான காலக்கெடு, குப்பைக்கிடங்கில் தீ விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி கமிஷனருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள தீர்ப்பாயம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





