கோவை: கோவை ELCE மருத்துவமனையின் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளிக்கு உயரழுத்த வாஷர் இயந்திரம் வழங்கப்பட்டது.
பள்ளி கழிப்பறை சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ELCE மெடிக்கல் பவுண்டேஷன் சார்பில் “க்ளீன் டாய்லெட்” திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை சுத்திகரிக்கும் உயரழுத்த வாஷர் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரத்தினபுரி, கணபதி, ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகள், கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் வாஷர் இயந்திரங்களை ELCE மெடிக்கல் பவுண்டேஷன் வழங்கியுள்ளது.
இதனிடையே, திட்டத்தின் 11வது இயந்திரம் பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
Read Also: மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

இந்த பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் கழிப்பறை சுகாதார பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த இயந்திரம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரழுத்த வாஷர் இயந்திரத்தை ELCE மருத்துவமனை நிர்வாகி வித்யா வழங்கினார்.
பள்ளியின் சுகாதாரத்தை மேம்படுத்த உதவிய ELCE மெடிக்கல் பவுண்டேஷனுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

