கோவை: ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையிலும் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அச்சங்கத்தினர் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தினர்.
கிளாஸ் 1&2 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2023 டிசம்பர் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு தற்போது வரை வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில் உடனடியாக அரசு தங்கள் கோரிக்கையை ஏற்று அதனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன மாநில துணைச் செயலாளர் கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




