கோவை: கோவையில் பாத்திரம் கழுவச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழிலாளியை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் பாத்திரம் கழுவச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழிலாளியை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் குமார் (25), கோவையில் கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகரில் அறை எடுத்து தங்கி, பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அவருடன் பீகாரைச் சேர்ந்த குணாலன் மற்றும் சில நண்பர்களும் தங்கி வந்தனர்.
சம்பவத்தன்று இரவு அனைவரும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டனர். பின்னர், பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுமாறு தீபக் குமார், குணாலனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த குணாலன், தீபக் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதால், அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் சென்று தூங்கினர்.
நள்ளிரவில் ஆத்திரம் அடங்காத குணாலன், கத்தியுடன் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த தீபக் குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த தீபக் குமார் வலியால் அலறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்துக்குப் பிறகு குணாலன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், தீபக் குமார் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குணாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.





