கோவை : பாலமலை மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் 3-வது கொண்டை ஊசி வளைவில் 407 வேன் கவிழ்ந்த விபத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த 22 பக்தர்கள் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 பக்தர்கள், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பாலமலை அரங்கநாதர் சுவாமி கோயிலில் ஆன்மீகச் சேவைப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளனர்.
இதற்காக TN 74 Q 8947 என்ற பதிவு எண் கொண்ட டாடா 407 வாகனத்தில் பாலமலைக்கு வந்த அவர்கள், கோயில் பகுதியில் பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சேவைப் பணிகளை முடித்துக் கொண்டு செப். 6-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அனைவரும் அதே வாகனத்தில் பாளையங்கோட்டையில் உள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
VIDEO
பாலமலை மலைப்பாதையில் வேன் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது, 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென பிரேக் பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேன் திடீரென கவிழ்ந்ததால், அதில் இருந்த பக்தர்கள் அலறித் துடித்தனர். விபத்து சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 22 பேருக்கும் லேசானது முதல் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கே.ஆர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேக் பழுதானதா அல்லது விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





