NCC Exclusive: கோவையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், உக்கடம், திருச்சிரோடு, அவிநாசி ரோடுகளில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலங்களின் காரணமாக மாநகரில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்நிலையில், உக்கடம் மேம்பாலம், ஜி.டி நாயுடு மேம்பாலம் மற்றும் திருச்சிரோடு மேம்பாலங்களில் இரவு நேரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் பைக், கார் ரேஸ்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் ரீல்ஸ் செய்ய சிலர் மேம்பாலங்களில் பைக் சாகசம் செய்கின்றனர் என போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இவர்கள் நள்ளிரவு நேரங்களில் மேம்பாலத்தின் மீது மிக அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மேம்பாலங்களில் பைக், கார் ரேஸ் செல்வதை தடுக்கும் வகையில், இரவு 11 மணிக்கு மேல் அனைத்து மேம்பாலங்களிலும் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர்.
மேலும், இந்த தடுப்புகள் காலையில் அகற்றப்பட்டு வழக்கம் போல் போக்குவரத்துக்கு திறந்து விடப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று இரவு முன்கூட்டியே மேம்பாங்கள் அடைக்கப்பட்டன. இதனால் அவினாசி சாலையின் வெவ்வேறு சிக்னல் பகுதிகளிலும், திருச்சி சாலை மற்றும் உக்கடத்தில் ஒரு சில இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ காட்சிகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ” ரீல்ஸ் எடுக்கிறார்கள், ரேஸ் ஓட்டுகிறார்கள் என்றால் காவல்துறையினர் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு பொதுமக்களை இப்படி அவதிக்கு உள்ளாக்கக் கூடாது. அனைத்து தினங்களிலும் மேம்பாலங்களை மூடுவதை விட்டுவிட்டு, புத்தாண்டு உள்ளிட்ட அதீத கொண்டாட்ட நாட்களில் மட்டும் இரவு நேரங்களில் மேம்பாலங்களை மூடலாம்.” என்றனர்.

