கோவை: சொக்கனூரில் கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி முறைகேடு நடந்துள்ளதாக வழக்கறிஞர் லட்சுமண நாராயணன் பேட்டியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் ஊராட்சிப் பகுதியில் கல் குவாரிக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வழக்கறிஞர் லட்சுமண நாராயணன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞர் (Additional Standing Counsel) லட்சுமண நாராயணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“சொக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனம் சுமார் 100 அடி ஆழம் வரை ஒரு ஏக்கர் பரப்பளவில் பாறைகளை உடைத்து குவாரி செயல்படுத்தியுள்ளது. தற்போது அதே பகுதியில் கண்ணியமால் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் புதிய குவாரி அமைக்க அனுமதி பெற முயற்சி செய்து வருகிறது.
இந்த குவாரிக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் முன்னாள் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய செயலாளர் உள்ளிட்டோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். கிராம சபையில் குவாரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், அதற்கு மாறாக சொக்கனூர் ஊராட்சியைச் சேராத சிலரின் பெயர்களில் கோரிக்கைகள் பெற்று, குவாரியால் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும் எனக் கூறி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக” அவர் குற்றம்சாட்டினார்.
வீடியோ காட்சிகள்
மேலும், “அந்த பரிந்துரையின் அடிப்படையில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதற்கு எதிராக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளிலும் ஆட்சேபனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விசாரணை நடத்தி, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவையின் அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் வாசகர்களே…





