கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ராகுல்நாத் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் முன்னிலையில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கீதாஞ்சலி. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்ததாவது,
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முதன்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் குடிநீர் விநியோக நிலை, குடிநீர் பணிகளின் முன்னேற்றங்கள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு செயல்பாடுகள், போதைப்பொருள் மற்றும் புகையிலை இல்லா வளாகம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குறைதீர் மனுக்களின் தற்போதைய நிலைகுறித்து அறிந்து உரிய தீர்வுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில், டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
வருவாய்த்துறை, நில அளவை சார்பில் இணையவழி பட்டா, பட்டா மாற்ற விண்ணப்பங்களின் நிலை குறித்தும், வேளாண்மைத்துறையின் சார்பில் உழவர் பதிவேடு, பயிர் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும், மகளிர் திட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம், அங்கன்வாடி மையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், நீர்வளத்துறையின் சார்பில், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் பேரிடர் கால முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் நாள் கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் என தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.





