கோவை: 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
தேசிய கைத்தறி தினமானது வருடந்தோறும் கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்க ஆகஸ்ட் 7-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தேசிய கைத்தறி தினமானது கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் சுதேசி இயக்கத்தின் துவக்கமாகவும் பொதுமக்களால் நடத்தப்பெற்ற சுதந்திரப்போராட்டத்தினை நினைவு கூறும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்திப்பொருட்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கைத்தறி நெசவு தொழிலானது விவசாயத்திற்கு அடுத்தபடியாக கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு பாரம்பரிய தொழிலாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 07.08.2026 அன்று 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை மூலமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்புகைத்தறி கண்காட்சி மற்றும் பொள்ளாச்சி தாலூகா வதம்பச்சேரி பகுதியில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் தேசிய கைத்தறி தின சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கோயம்புத்தூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள் மற்றும் மென்பட்டு சேலைகள் ஆகியவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், வதம்பச்சேரியில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு இரத்த அழுத்தம், கண்பரிசோதனை, காசநோய், பரிசோதனை, நுரையீரல் நோய் பரிசோதனை போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டவுள்ளது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் திரளாக கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.




