கோவை: கோவையில் தொடங்கிய அகில இந்திய பருத்தி மாநாடு சர்வதேச தரத்திலான நிலையான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய பருத்திக் கழகத்தின் (CCI) தலைவர் லலித் குமார் பேசியுள்ளார்.
இந்திய பருத்தி கூட்டமைப்பு (Indian Cotton Federation) சார்பில் “எதிர்காலத்திற்கான நிலையான பருத்தி இழை” (Sustainable Cotton Fibre for the Future) என்ற தலைப்பின் கீழ் நடைபெறும் 7-வது அகில இந்திய பருத்தி மாநாடு கோவையில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், இந்திய பருத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சி, நிலையான உற்பத்தி, தர மேம்பாடு, உலகளாவிய சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகின்றன.
மாநாட்டின் தொடக்க நிகழ்வில் சிறப்பு நினைவு மலர் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய பருத்திக் கழகத்தின் (CCI) தலைவர் லலித் குமார் குப்தா பேசுகையில், “பருத்தி என்பது வெறும் வர்த்தகப் பொருள் மட்டுமல்ல; நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின் முக்கியத் தூணாக விளங்குகிறது. உலகளவில் இந்திய பருத்தியின் முன்னணிநிலையைத் தொடர்ந்து நிலைநிறுத்த, விவசாயிகள் முதல் நூற்பாலை மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குவது அவசியம்” என்றார்.
உலகளாவிய சந்தையில் இந்திய பருத்தியின் போட்டித்திறனை அதிகரிப்பதற்கு, சர்வதேச தரத்துக்கு இணையான உயர்தர பருத்தி உற்பத்தி அவசியம் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, நிலையான பருத்தி உற்பத்தி, தர மேம்பாடு, விவசாயிகளின் உற்பத்தித் திறன் மற்றும் வருவாய் உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
மேலும், பருத்தி விலை நிர்ணயம் என்பது உலகளாவிய சந்தை நிலவரம், தேவை–விநியோகம் மற்றும் இயற்கைச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுவதால், குறுகிய கால அணுகுமுறையை விட நீண்டகால மற்றும் ஒருங்கிணைந்த சந்தை அணுகுமுறை அவசியம் என தெரிவிக்கப்பட்டது.
இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் ஜே. துளசிதரன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், CITI தலைவர் அஷ்வின் சந்திரன் வரவேற்புரையாற்றினார். மத்திய ஜவுளி அமைச்சக இயக்குநர் பூர்ணேஷ் குருராணி, Cotton Association of India (CAI) தலைவர் முகூல் தாயல், Premier Mills நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்ட பருத்தி மற்றும் ஜவுளித் துறையின் முன்னணி நிர்வாகிகள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பருத்தி மற்றும் ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய முன்னோடிகளின் சேவையைப் பாராட்டும் வகையில், விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்’ வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்திய பருத்தித் துறையை உலகளாவிய அளவில் மேலும் வலுப்படுத்தவும், விவசாயிகள் முதல் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் வரை முழு மதிப்புச் சங்கிலியிலும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் இம்மாநாடு முக்கியமான தளமாக அமையும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், இந்திய பருத்தி கூட்டமைப்பின் செயலாளர் நிஷாந்த் ஆஷர் நன்றியுரை ஆற்றினார்.





