கோவை: தொட்டிலில் விளையாடிய போது சீலையில் கழுத்து இறுக்கி சிறுவன் பலியாது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அன்பு நகர் அலீப் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரபிதீன். இவரது மனைவி சுமைய்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 12 வயது மகன் அங்குள்ள பள்ளியில் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுவனும் அவரது சகோதரியும் பள்ளியை முடித்து வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்று திரும்பாததால் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிறுவன் சீலையில் தொட்டில் கட்டி விளையாடி உள்ளார். அதில் எதிர்பாராத விதமாக சீலை சிறுவனின் கழுத்தை இறுக்கி உள்ளது.
சிறிது நேரத்தில் சிறுவன் துடித்துடித்து உயிரிழந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் இறந்து இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனின் உடலை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டிலில் விளையாடிய சிறுவன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


