கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் சமூக வலைதளங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
உலகம் முழுவதும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சமூக வலைதளங்கள் மூலமாக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கோவை சரக டிஐஜி சசி மோகன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குனர் குகன், புற்றுநோயியல் துறை மருத்துவர் பார்கவி ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சுந்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதனால் இது தொடர்பான விழிப்புணர்வை இந்த மாதம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளோம். இதில் 14 வகையான புற்று நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.” என்றார்.
டிஐஜி சசி மோகன் பேசுகையில், “புற்றுநோய் குறித்த சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் இந்த சமூக வலைதள பிரச்சாரம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். மருத்துவர்கள் மூலம் இதனை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை உருவாகிறது. மேலும் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கு செல்ல முடியாத மக்களுக்கு உதவுவது சமூகத்துக்கு செய்யும் நல்ல சேவையாக இருக்கும். இந்தப் பணியை தற்போது பிரம்மாண்டமாக தொடங்குவது போலவே தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.
இதைத் தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தை இயக்குனர் குகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
உலகம் முழுவதும் டிஜிட்டல் மையமாக உள்ள இந்த சூழலில், சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும்.இதில் ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிதலின் அவசியம், புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் சில தகுந்த சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனையை நம் மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ள உள்ளோம். இதில் பங்கேற்ற பொதுமக்கள் பயனடையலாம். என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

