கோவை: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் Tree of Unity அமைக்கப்பட்டு, புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
உலகளவில் புற்றுநோயால் ஏற்படும் தாக்கம், அதன் தன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 4ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF) மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (IMA), கோயம்புத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து, பி.எஸ்.ஜி மருத்துவமனை புற்றுநோய் தினத்தை அனுசரித்தது.
இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருளான ‘United by Unique’ (தனித்துவத்தால் ஒன்றுபட்டோம்) என்பதனை மையமாகக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புற்றுநோய் சிகிச்சை பெற்றுவருவோர் மற்றும் அந்நோயில் இருந்து மீண்டவர்கள் கலந்து கொண்டனர். புற்றுநோய்கள் தனித்துவமானதாக இருந்தாலும், எவரும் தனியாகப் பயணிப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நோயாளிகளும், அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் வாழ்க்கை மற்றும் முன்னேற்ற கவிதைகளை ஒற்றுமையின் மரம் (Tree of Unity) என்ற மரத்தில் கட்டினர். இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.ஜி மருத்துவ மாணவர்களின் ஆர்க்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, புற்றுநோயை வென்று வந்த TEDx பேச்சாளர் சங்கீதா ஸ்ரீதர், தனது வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில், புற்றுநோயை எதிர்கொண்ட பயணத்தை பகிர்ந்தார்.
இது மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது. மேலும் அவரது வார்த்தைகள் நோயாளிகளுக்கு பெரும் ஊக்கமாகவும், கடினமான சூழலை தாங்கும் மனவலிமை உருவாக்கும் வகையிலும் இருந்தன.
நிகழ்ச்சியின் நிறைவாக, இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆரோக்கிய பரிசுத் தொகுப்புகளை புற்றுநோயாளிகளுக்கு வழங்கினர்.

