கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர் குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் எந்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோதப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாகப் போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் அப்பாஸ் (கோவை) ஜென்னி ஜேக்கப் (கோவை) ரூபன் (கோவை) நவ்பில் (கேரளா மாநிலம்) ஆகிய நான்கு பேரை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கும்பலுக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா? ஆந்திரா அல்லது வெளிமாநிலங்களில் இருந்து இவை கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு அருகே பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது.

