வேகாத வெயிலில் வேலை; போலீசாருக்கு சோலார் தொப்பி கொடுத்த கோவை கமிஷனர்!

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கும் திட்டத்தை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்பணியில் மொத்தம் 230 போலீசார் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சாலைகளில் வெயிலில் நின்று பணி செய்யும் பெண் போலீசார் உட்பட போக்குவரத்து போலீசார் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, போலீசாரின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சோலார் தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி ஆகியவற்றை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் உதவி ஆணையர் சிற்றரசு, உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர்கள் முருகேசன் பெரியசாமி மற்றும் உதவி காவல்துறை உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

Recent News

Video

Join WhatsApp