கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு காரணமாக கோவையை சேர்ந்த அனு கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சுயாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியாரிய இயக்கங்கள் திராவிட இயக்கங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஒன்றிய அரசின் பித்தலாட்டத்தால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததன் காரணமாக ஏற்கனவே நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் மீண்டும் நீட் தேர்வை எழுதக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே கோவையை சேர்ந்த மாணவி அவரது பெற்றோர்களின் பொருளாதார நிலையை நினைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு நேர்மையாக நடைபெறுவதில்லை, தேர்வு தாள்களை கசிய விட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசின் பொழுது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
ஒன்றிய அரசு கல்விக்காக ஒதுக்குகின்ற பணத்தைக் காட்டிலும் இந்த நீட் தேர்வுக்காக தேர்வு மையங்கள் கொள்ளையடிப்பது அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றார்.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாகவும் இதற்காக ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மக்கள் மத்தியில் போராட வேண்டும் என்றும் தற்போது பதவியேற்றுள்ள தமிழக அரசு தற்பொழுது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஆதரிக்கும் என்றும் எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


