கோவை: அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்கபட்ட சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை அடுத்த கோவை புதூர் தனியார் கல்லூரிக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான மஞ்ச பள்ளம் என்ற காட்டுப் பகுதியில், நேற்று காலை பெண் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்து உள்ளார். இது குறித்து உடனடியாக மதுக்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் முக்கியத் தடயங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து விசாரிக்க மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று நான்கு வாலிபர்கள் ஒரு இளம்பெண்ணை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் பொதுமக்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்து உள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களைப் போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை.
கொலையாளிகளைப் பிடிக்க கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகள், கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்தும், பிடிபட்ட வாலிபர்களின் நடமாட்டம் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து போலீஸார் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண் யார் என்பதை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொலை செய்ய பட்ட பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அந்த அடையாளங்களை வைத்து அவர் யார் என கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.”
என்று தெரிவித்தனர்.



