கோவை : பள்ளி இடைநிற்றல் மாணவர்களை முறையாக கண்காணிக்காததால் சிறுவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கும் அபாயம் அதிகரிப்பதாக இளைஞர் நீதிக்குழுமம் எச்சரித்துள்ளது.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (NCRB) தரவுகளின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பான குற்ற வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இதனால், பள்ளி இடைநிற்றலை கல்வி சார்ந்த பிரச்சினையாக மட்டுமல்லாமல், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த முக்கிய அம்சமாக அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளியை இடைநிற்றும் மாணவர்கள் குறித்த முறையான கண்காணிப்பு பல இடங்களில் இல்லாததாகவும், வெளிமாநில மாணவர்கள் மட்டுமே இடைநிற்றலுக்கு காரணம் என்ற பொதுவான கருத்து நிலவி வருவதாகவும், உள்ளூர் மாணவர்கள் ஏன் பள்ளியை விட்டு விலகுகின்றனர் என்பது குறித்து போதுமான ஆய்வு நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில், பள்ளி இடைநிற்றல் மாணவர்களை முறையாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:
“சமீப காலமாக குற்ற வழக்குகளில் சிக்கும் சிறுவர்களில் பெரும்பாலானோர் பள்ளியை இடைநிற்றியவர்கள் அல்லது பள்ளிக்கு முறையாக வராதவர்கள். குறிப்பாக போதைப்பழக்கம், அடிதடி, திருட்டு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இத்தகைய மாணவர்கள் அதிகமாக இடம்பெறுகின்றனர்.
எனவே, பள்ளி நிர்வாகம், காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, ஆரம்ப நிலையிலேயே இடைநிற்றல் மாணவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட அளவிலான கூட்டங்களில் இளைஞர் நீதிக்குழுமம் பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருடன் உடனடியாக ஆலோசனை நடத்துதல், தேவையான மனநல ஆலோசனைகளை வழங்குதல், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், பள்ளி மாணவர்கள் சட்ட விழிப்புணர்வு இல்லாததால், காதல் என்ற பெயரில் பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்கி வருகின்றனர். எனவே, நல்ல தொடுதல்–கெட்ட தொடுதல், தனியுரிமை பாதுகாப்பு, இணையதள பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து பள்ளி நிலையிலேயே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை தண்டிப்பது மட்டுமே நோக்கமல்ல; அவர்களை நல்வழிப்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கம். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் போதைப்பழக்கத்திற்கு ஆளான நான்கு சிறார்கள் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.


