கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்; நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
கோவையில் சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முறையாக பயிற்சியின்றி, ஓட்டுநர் உரிமமும் இல்லாமல் வாகனங்களை இயக்கும் சிறுவர்களால் கோவையில் அவ்வப்போது விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.
கடந்த வாரம் பள்ளி மாணவன் ஒருவன் தனது நண்பர்களுடன் காரில் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவன் தாறுமாறாக காரை ஓட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
இந்த சூழலில், சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவதை பெற்றோர் தடுக்க வேண்டும் என்றும், போலீசார் வாகன தணிக்கை நடத்தி இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே கோவையில் சிறுவன் பைக் இயக்கியதால் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றை சிறுவர்கள் இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்கள் முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சி செய்தனர்.
இதில் எதிர்பாராத விதமாக சிறுவர்கள் சென்ற பைக் திடீரென நிலைதவறி சாலையில் விழுந்தது.
அப்போது வண்டியில் இருந்த ஒரு சிறுவன் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். இதில் பேருந்தின் டயர் சிறுவனின் மீது ஏறி இறங்கியது. பைக்கில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுவன் சற்று தள்ளி விழுந்ததால் இந்த விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்தார்.
தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே விபத்தில் சிக்கிய சிறுவன் சாலையில் படுத்து உயிருக்கு போராடிய இந்த பதைபதைக்கும் நேரடி விபத்துக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



