கோவை: கோவையில் ஒரே டூ-வீலரில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 4 பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் போக்குவரத்து விதிகளை மீறி டூ-வீலரில் சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர வைத்துள்ளது.
கோவை, நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், பள்ளி சீருடையுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் நகரின் மிக முக்கிய பகுதியான காந்தி பார்க் சாலையில் சென்றுள்ளனர்.
டூ-வீலரில் மூன்று பேர் செல்வதே சட்டப்படி தவறு எனும் போது, ஹெல்மெட் கூட அணியாமல், ஒரே வாகனத்தில் நான்கு பேராக அமர்ந்து மற்ற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வளைவுகளில் சென்று உள்ளனர்.
இதனை பின்னால் காரில் வந்த வாகன ஓட்டி ஒருவர், இந்த மாணவர்களின் விபரீதப் பயணத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமீப காலமாகக் கோவையில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி கொடூர விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வரும் நிலையில், இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




Comments are closed.