கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவில் மேடு பகுதியில் பிரதான சாலையை தவிர்த்து இணைப்புச் சாலைகள் மிகவும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் நிலையில் நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்பொழுது சாலை ஓரம் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ மோதிய நபர் மயங்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.
மேலும் இந்த விபத்தில் ஆட்டோ எதிர்புறம் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆட்டோ மீது மோதி சாய்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலேயே சிக்கிக்கொண்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவை நிமர செய்து அவரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் சிறு காயங்களுடன் உயர் தப்பி உள்ளார். தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.



