கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்குச் சென்று தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது காந்தி நகர் அருகே அவர் நடந்து சென்றபோது, ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அந்த வாலிபர், இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இருப்பினும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் வந்த பைக் எண்ணை அந்தப் பெண் கவனித்து மனதில் பதித்துக் கொண்டார். பின்னர் இதுகுறித்து சுந்தராபுரம் போலீசில் பைக் எண்ணுடன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் சுந்தராபுரம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த யுவராஜ் (25) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் யுவராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கோவை பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





