கோவை: கட்டுமான நிறுவனங்கள், கட்டட உரிமையாளர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டட உரிமையாளர்கள்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, மாநகராட்சியின் 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள கட்டட கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டட உரிமையாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளான டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது.
தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களை திறந்த நிலையில் வைத்திருத்தல் கூடாது. தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து நீர் நிரப்பப்பட்டு கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.
அதேபோல், கட்டுமான இடங்களில் உள்ள கட்டடத்தில் லிப்ட் பிட்டில் நீர் தேங்காத வகையில் ப்ளீசிங் பவுடர் அல்லது உபயோகமற்ற என்ஜின் ஆயில் பயன்படுத்தி கொசு புழுக்கள் உருவாகாமல் வைத்திருத்தல் வேண்டும்.
கட்டுமான இடங்களில் தங்கி பணிபுரியும் கட்டடப்பணியாளர்கள் தங்கும் தற்காலிக குடில் கொட்டகையில் அமர்கள் பயன்படுத்திய வீணான பிளாஸ்டிக் பொருட்கள் கப்புகள், டயர்கள், பாலித்தின் பைகள், முட்டை ஓடுகள், தேங்கா சிறட்டைகள் போன்றவற்றையினை உடனக்குடன் அகற்றிட வேண்டும் கட்டுமானப்பணி நடைபெறும் இடங்களில் வைத்திருக்கும் மண் அள்ளும் ஈட்டிகள், கலவை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளை தினசரி கழுவிய பின்னர் நீர் தேங்காமல் வைத்துகொள்ள வேண்டும்.
மேலும் கட்டிடங்களில் பயன்படுத்திய பெயின்ட் டப்பாக்கள் உடைந்த குடங்கள் பிளாஸ்டிக் பைப்புகள், அட்டைகள், தெர்மாகோல் போன்றவற்றை நீர் தேங்காதவாறு உடனடியாக அகற்றிட வேண்டும். கட்டிட பணியாளர்கள் பயன்படுத்தும் பார்சல் சாப்பாடு கலன்கள், பாலித்தின் கவர்கள், கண்ணாடி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அகற்றிட வேண்டும்.
கட்டடத்தினை சுற்றி கழிவு நீர் தேங்காதவாறு வைத்திருத்தல் வேண்டும். கட்டுமான இடங்களில் அமைத்திருக்கும் தற்காலிக கூரைகளில் டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடித்தல் வேண்டும். கொசுக்கள் பரவுவதை தவிர்க்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் கட்டட உரிமையாளர்கள் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்கீழ் தகுந்த மேல்நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்





