கோவை: கோவையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான செக் மோசடி வழக்கில் வியாபாரி ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதியைச் சேர்ந்த பாண்டியன் (69) என்பவர், கடந்த 2017-ஆம் ஆண்டு காந்திபுரத்தில் இசைக்கருவிகள் விற்பனை கடை நடத்தி வந்த கீரணத்தைச் சேர்ந்த வியாபாரி சண்முகம் (43) என்பவருக்கு தொழில் தேவைக்காக ரூ.2 லட்சம் கடனாக வழங்கியிருந்தார்.
கடன் தொகையை பலமுறை திருப்பிக் கேட்டபோதும், சண்முகம் பணத்தை வழங்காமல் அதற்குப் பதிலாக ஒரு காசோலையை (செக்) வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த செக்கை பாண்டியன் வங்கியில் செலுத்தியபோது, சண்முகத்தின் வங்கிக் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் அது திரும்பியது.
இதையடுத்து, பலமுறை கேட்டும் பணத்தை திருப்பிச் செலுத்தாததால், பாண்டியன் கோவை ஜே.எம். எண்–5 நீதிமன்றத்தில் சண்முகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெஸ்டா, குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சண்முகத்திற்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
மேலும், பாண்டியனுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 2 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.





