கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சின்னியம்பாளையம் மற்றும் நீலாம்பூர் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மற்றும் கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள தற்போதைய நிலவரம், பணிகளின் வேகம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆட்சியரிடம் விளக்கினர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, நிலம் வழங்க உள்ள சின்னியம்பாளையம் மற்றும் நீலாம்பூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் நேரில் சந்தித்துப் பேசிய போது, நிலம் கையகப்படுத்துவதில் தங்களுக்கு உள்ள நடைமுறைச் சிக்கல்கள், இழப்பீடு மற்றும் மாற்று இடங்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, விரிவாக்கப் பணிகள் தொய்வின்றி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.




