கோவை: நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் செய்தி எதிரொலியாக, கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் திருமண போட்டோஷூட் என்ற பெயரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட கார் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் சமீபத்தில் திருமணம் முடிந்த தம்பதியை கார்களில் அழைத்துச் சென்ற நண்பர்கள், ஆபத்தான முறையில் போட்டோஷூட் நடத்தினர்.
கார்களின் கதவுகளில் தொங்கியபடியும், ஜன்னல் வழியாக உடலை வெளியே நீட்டியபடியும், சாலையிலேயே வாகனங்களை மெதுவாக இயக்கியும் அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தனர்.
இந்தச் செயலால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த விவகாரம் குறித்து நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் விரிவான செய்தியை இணைதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வெளிப்படுத்தியது.

Power Cut Coimbatore: கோவையில் ஜூலை 14ல் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். வைரலான வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காரை அடையாளம் கண்ட போலீசார், போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான வகையில் வாகனத்தை பயன்படுத்தியதற்காக கார் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
சாலை மற்றும் மேம்பாலங்கள் பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டவை. புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்வதற்காக சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவது, கதவுகளில் தொங்குவது, உடலை வெளியே நீட்டுவது போன்ற செயல்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





